பிரார்த்தனை

புயலில் விழுந்த மரத்திற்கு
இழப்பீடு என்றார்கள்!
என் வீட்டு மரமோ
கிளை அனைத்தும் முறிந்து
வேர் மட்டும் சாயாமல்
இன்றும் இங்கு
நின்றுகொண்டிருக்கிறது!

கிழிந்த ஆடை அணிந்தோர்க்குப்
புத்தாடை என்றார்கள்!
நான் அணிந்த ஆடையோ
பலமுறை கிழிந்த பின்னும்
அங்கங்கே ஒட்டு போட்டு
இன்று மட்டும் கிழியாததாய்
காட்டிக்கொள்கிறது!

இறந்து போனவர்களுக்கு
நீதி வேண்டும் என்றார்கள்!
நானோ சாவின் விளிம்புவரை சென்று
திரும்பி வந்திருக்கிறேன்
என்னை, "வரிசையில் நில்
இறந்து விட்டவர்களுக்கே
முன்னுரிமை" என்கிறார்கள்!

மனம் நொறுங்கி போனவர்க்கு
ஒரு தழுவல் இலவசம் என்றார்கள்
என் மனமோ, கீறல் பல விழுந்து
நொறுங்கிப் போக 
நாள் பார்த்துக்கொண்டிருக்கிறது
"எங்களிடம் தழுவல்கள் குறைவாக இருக்கின்றன
மனம் நொறுங்கி விட்ட பின் வா,
நாம் தழுவிக் கொள்ளலாம்" என்கிறார்கள்!

உடைந்து போனதற்காகக் கிடைக்கும் சலுகை,
உடையாமலிருப்பதற்காகக் கிடைப்பதில்லை!
உங்கள் சலுகைகளுக்காகவே
சீக்கிரம் உடைந்து விட
பிரார்த்திக்கிறேன் !

                                   -இருதயா

Comments

Popular Posts