ஊழல்  பணத்தில் உல்லாசமாய்
உழன்று கொண்டிருக்கும் உத்தமர்களே
உடையின்றி உச்சி வெயிலில் பாடுபடும்
உழவனின் அருமை
உங்களுக்கு எப்படித் தெரியும்?

உரிமைகளையும் உடைமைகளையும்
மீட்டுத்தாருங்கள் என்றால்
தேசதுரோகி என்றீர்,
பொறுக்கி என்றீர்,
இப்போது சமூகவிரோதி என்கிறீர்!

பசுமையை அழிப்பதற்கு பெயர்
பசுமை வழிச் சாலையாம்!
நாங்கள் விருந்து சாப்பிட
முடியவில்லையே என்று அழவில்லை
உங்களுக்கு விருந்தோம்ப
முடியவில்லை என்றே அழுகிறோம்!

வெளிநாட்டில் கொன்றார்கள்
காரணம் இந்தியன்!
பக்கத்து நாட்டில் கொன்றார்கள்
இல்லை இன்னும் கொல்கிறார்கள்
காரணம் தமிழன்!
தற்போது சொந்த மண்ணிலும்
கொல்கிறார்கள்!
பாவம்!
யார் கண்களுக்கும் நாங்கள் மனிதராக
தோன்றவில்லை போலும்!

எங்களை அடக்கி ஆள
நீங்கள் வீரரும் அல்ல
நாங்கள் கோழைகளும் அல்ல!
உம்மை தட்டிக்கேட்க
பகத்சிங்கும் பாரதியுமே வேண்டுமா?
எம்மைப் போன்றோர் போதாதா?

                                        -மகி

Comments

Popular Posts