Thursday, 13 August 2020

அன்புள்ள வீரர்களுக்கு!

“எங்கோ படித்த ஞாபகம்
‘தற்கொலை என்பது தெய்வநிந்தனை’ 
மனிதர்கள் மீது நம்பிக்கையற்ற இந்தச் சூழலுக்காக 
தெய்வத்தை நிந்திக்க விரும்பியே
இந்த முடிவுக்கு வந்தேன்”

அவளின் தற்கொலை கடிதம் 
ஆழமான கவிதைதான்

“என்னை கோழை என்று பலரும் போற்றுவர்.
அவர்களின் கரிசனைக்கு நன்றி,
அம்மாபெரும் வீரர்கள் நலமோடு வாழ
தெய்வத்திடம் பிரார்த்திக்கிறேன்”

அவள் விடைபெற்று ஐந்தாண்டுகள் வழிந்தோடிற்று
அந்த கடிதத்தின் வரிகளுக்கு என் மனதளவில் 
இன்னும் வயது ஆகவே இல்லை

“அந்த மென்மையான வரிகள்,
’SORRY!  உங்களால குழந்த பெத்துக்க முடியாது’ 
கேட்டதுமே என் இதயம் நின்றிருக்கக் கூடாதா.
பாழாப் போன இதயம் தாங்கிதொலைத்துவிட்டது.”

எட்டு ஆண்டுகளில்
அவள் இதயம் எவ்வளவு புண்ணாகியிருக்கும்
அன்பை மட்டுமே சுமந்ததாயிற்றே,
அதிகமாய் காயப்பட்டு இருக்கும்.

“என் இல்லாமை ஒருவரைமட்டுமே 
பாதிக்கும் என்று நம்புகிறேன்.
SORRY! மனோ, தாமதமாய் இம்முடிவை எடுத்ததுக்கு,
நான் உங்கள ரொம்பவும் தொந்தரவு செய்துவிட்டேன்.”

நான் சந்தித்த மனிதர்கள் பலருக்கும் 
அவள் கடிதத்தை ஒப்பித்துவிட்டேன்.
அம்மனிதர்களின் கண்ணீர்த் துளிகளே
என்னை நடமாடச் செய்தது.

அவள் கடிதத்தை ஓர் இதழில் வெளியிடச் செய்துவிட்டேன்.
என் உடைமைகளை பங்கிட்டுவிட்டேன்.

வீரர்களிடமிருந்து விடைபெறுகிறேன்

இப்படிக்கு ,
மனோ

                             -அகல்

No comments:

Post a Comment

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...