Saturday, 30 December 2017

போர் ! ஆமாம் போர் !

அறுபது வயதிலும் அயராமல்
அழகிகளுடன் ஆடும் இவருக்கு,
அரசியலுக்கு வர முடிவெடுப்பதற்குள்
முடியனைத்தும் கொட்டிவிட்டது!
தமிழன் என்று சொல்லிக்கொள்வார்
அதேநேரத்தில்
தமிழனுக்கு பிரச்சினை வந்தால்
தலைமறைவாகிவிடுவார்!
எதற்கெடுத்தாலும் கையை மேலே
காண்பிப்பதாலோ என்னவோ
காவி வேட்டிகளும்,கட்சிகளும்
இவரை பின்தொடர்கின்றனர்!
தலைவா!!!தலைவா!!!
என்று கோஷமிட்ட கூட்டம்
இப்போது நாட்டுக்கே தலைவராக்க
துணிந்து விட்ட சோகம்!
கூத்தாடியை கும்பிட்டு
என் பாட்டன் தவறு இழைத்தான்
அந்த பாவம் என் கால்களை
இன்னும் சுற்றுகிறது!
என் பிள்ளையயையும் அது சுற்றுமோ?
அவர்களை குறைகூறவில்லை
அனைவரும் நல்ல நடிகர்கள்
ஆனால்
எல்லா இடத்திலும் நடிக்காதீர்கள்!!!
                                            -மகி

Thursday, 21 December 2017

கண்ணீர் கரையில்

ஓ கடல் மாதா...
படகுகள் மிதப்பது தண்ணீரில் அல்ல
என் கண்ணீரில்!
கரையில் ஒலிப்பது அலைகளின் சத்தம் அல்ல
என் அழுகுரலின் சத்தம்!
காய்வது கருவாடு அல்ல
நானும் என் மனமுமே!
கலங்கரை விளக்கம் போல காத்திருக்கிறேன்
என் சொந்தங்களை எதிர்பார்த்து
அன்னை (கடல்) என்று தானே
உன்னிடம் அவர்களை அனுப்பிவைத்தேன்!
ஆனால் நீயோ
என்னை அழவைக்கிறாய்!
ஓ அலைகளே...
அழையா விருந்தாளியாக வந்து
எங்களை அழித்துவிட்டாய்!
கடலில் கொல்லப்படுவது
எங்களுக்கு புதிதல்ல
ஆனால் கடலே காலனாக
மாறினால் நாங்கள் என்ன செய்வோம்!

                                     - மகி

Friday, 1 December 2017

அம்மா


இலக்கணம் தெரியாது அவளுக்கு 
இருந்தும்
ஆனா ஆவன்னா சொல்லித்தர 
அவள் மறந்ததில்லை!
கணக்கு தெரியாது
இருந்தும்
தினமும் கூட்டிப் பெறுக்க
அவள் மறுத்ததில்லை!
வரலாறும் தெரியாது
இருந்தும்
ராஜாக்களின் கதையை சொல்ல
அவள் தவறியதில்லை!
மருத்துவம் படிக்கவில்லை தான்
இருந்தும்
அவளின் மிளகு ரசத்திற்கு 
பயக்காத நோய் இல்லை!
மனோதத்துவம் படித்ததில்லை
இருந்தும்
தன் பிள்ளையின் மனதை படிக்க 
அவளைப் போல ஆளில்லை!
தெரியாமலே இவ்வளவு செய்யும்
அவளின் அருமை மட்டும்
நமக்கு தெரிவதே இல்லை!

                                  -மகி

Saturday, 4 November 2017

சென்னையில் மழை


மேகத்தோடு பகைத்துக்கொண்டு
சென்னைக்கு வந்த மழை
தனது நண்பனான ஏரியை
எதிர்பார்து தெருத்தெருவாய் அலைகிறது!
கட்டி அணைக்கும் நண்பனுக்கு பதிலாக
கண்ட இடமெல்லாம்
கட்டிடங்களை    கண்டதால்
பாசத்தால் ஏங்குகிறது
அங்கேயே தேங்குகிறது!

                                    -மகி

Friday, 3 November 2017

மழை

மண்ணை முத்தமிட
பூமிக்கு வந்தேன்...
என்னை முத்தமிட்டது
தார் சாலையும் கான்கிரீட் பலகைகளுமே...
                   -இருதயா

Wednesday, 1 November 2017

இனயம்

இணையத்தில் நேரம் செலவிடும் நமக்கு
இனயம் பற்றித் தெரிய
வாய்ப்பில்லை...
இனயம்- குமரி மாவட்டத்தின்
கடற்கரை கிராமம்
நம் மீனவ நண்பர்களின் வாழ்விடம்
இதை அழிக்கக் கொண்டுவந்தார்கள்
ஓர் திட்டம்...
யார் யாரோ
பெட்டி பெட்டியாய் பணம் சம்பாதிக்க
பெட்டக துறைமுகத்தை
கொண்டுவந்தார்கள்
இதன் வீரியம் யாருக்கும்
தெரியப்போவதும் இல்லை!
தெரியவிடப்போவதும் இல்லை!
நீங்கள் ருசியாக உண்ண
எங்கள் உயிரை பணையம்
வைத்தோம்
உயிரையும் இழந்தோம்!
அப்போதும் நீங்கள்
வேடிக்கை பார்த்தீர்கள்
இது வேடிக்கை பார்க்கும்
விஷயம் அல்ல
மூடர்களே!
வெட்கப்பட வேண்டிய விஷயம்!
எல்லை தாண்டினோம் என்று
கொன்றார்கள்
தற்போது சொந்த மண்ணையும்
தாரைவார்க்க சொல்கிறார்கள்!
இது என்ன நியாயம்?
ஒன்று மட்டும் சொல்கிறேன்
மீன்வலைகளை பிடித்த
எமது கரங்களால்
உங்களின் குரல்வளையைப்
பிடிக்க வைக்காதீர்!

                             -மகி

Friday, 27 October 2017

இதுவும் காதலே

கதைகள் பேசவில்லை!

கவிதைகள் பாடவில்லை!

கை கோர்த்து நடந்ததில்லை!

கனவிலே வந்ததில்லை!

முத்தங்கள் பகிரவில்லை!

முக்காடும் போடவில்லை!

இருந்தும் உனக்கான காதல்

என்றும் குறைந்ததில்லை!

நம்புங்கள் இதுவும் காதலே!

                                     -மகி

Thursday, 26 October 2017

உனக்கான கவிதை இது

உன்னைப் பற்றி கவிதை பாடினால்
அது காலப்போக்கில் அழிந்துவிடும்
எனவே தமிழில் பாடுவேன்!
சத்தம்    ஏதுமின்றி
என்னுள் நுழைந்தவளே
முத்த மழை பொழியவா?
முத்தமிழின் மழை பொழியவா?
பதிலை   வார்த்தையாக
சொல்ல முடியாவிட்டால்
பார்வையால் தூது அனுப்பு
அதற்கு ஏதுவாக நானும்
எழுதி   அனுப்புவேன்!
      
                                         - மகி

Thursday, 6 July 2017

பள்ளி

புழுதிக்காட்டில் அற்பப் பதராய்
சுற்றித்திரிந்த என்னை
புத்தகத்தோடு அள்ளி
அணைத்த பள்ளியே!!!
பால்வாசம் மறவாத என்னை
பாங்கோடு சீராட்டி பாராட்டி வளர்த்தாயே!
கடவுள் மீது நான்கொண்ட
சந்தேகத்தை நீக்கி
ஆசான் என்ற அன்புத்
தந்தையைத் தந்தாயே!
எங்கோ பிறந்தவனை
என் உயிரில் கலக்கச்செய்து
என் நண்பன் என்றாயே!
இப்பேதையை நீ ஞானியாக
மாற்றினாயோ இல்லையோ
நல்ல மனிதனாக உயர்தினாய்!
இத்தனை கற்றுத்தந்த நீ
உன் நினைவை அறுத்தெறிய
சொல்லித்தராமல் சென்றாயே!!!
                     
                                                 -மகி

Friday, 30 June 2017

அவள்


அவள் அவளாக இருப்பதில்
எத்தனை கடினம்?
அவள்,
அவளாக இருப்பதை விட
அடுத்தவர்களின் அவளாக இருப்பதால் தான்
இறுதியில் அவள்,
அவளின் உண்மையான அவளை இழந்துவிடுகிறாள்!
       
                                 -மகி

Wednesday, 21 June 2017

எங்கு செல்லுமோ இந்த பாதை?

காஷ்மீர் எல்லையில்
கொல்லப்பட்டால் இந்தியன்
அதுவே,
குமரி எல்லையில்
கொல்லப்பட்டால் தமிழன்
என்ன ஒரு ஆச்சர்யம்???
ஈழத்தில் எம் உறவுகளை
கொன்றபோதும் வேடிக்கைப்பார்த்தீ்ற்கள்!
இப்போது,
எம்மையும் அழிக்கப்பார்க்கிறீர்!
பிறர்க்கு அளித்து வாழும்
தமிழனையே அழிக்க துடிக்கிறீர்!
தமிழனின் பெருமையை
தமிழனையே அறியவிடாமல்
கீழடியில் வைத்து புதைத்துவிட்டீர்!
எம் உணவுப் பட்டியலைக் கூட
உம்மிடம் தாரைவார்த்துவிட்டோம்!
உண்பது உணவுதானா என்ற
சந்தேகமும் எழுகின்றது!
இதற்குமேலும் உணர்வின்றி இருந்தால்
உயிரற்ற உடலென்று எரித்துவிடுவீர்களோ
என்ற பயமும் எழுகின்றது!!!
                                       
                                           - மகி

தவற விட்டு விடக்கூடாது

அகில உலகின் மிக முக்கிய பிரபலத்தின் தரிசனம்  கை கொடுக்கவும் போட்டோ எடுக்கவும் அங்கிருந்த கூட்டம் அவரை நெருங்க நெரிசரில் அகப்பட்டு விடாமலலும்...